திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம் இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பதி மலைப்பாதையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் சிறுத்தை தாக்கி சிறுமி ஒருவர் மரணமடைந்தார். அதனை தொடர்ந்து மலைப்பாதையில் வனத்துறையினர் சிறுத்தைகள் பிடிப்பதற்காக கூண்டுகளை அமைத்தனர். அந்த கூண்டுகளில் ஐந்து சிறுத்தைகள் சிக்கின. இந்த நிலையில், திருப்பதி மலைப்பாதையில் மீண்டும் சிறுத்தை மற்றும் கரடிகள் நடமாட்டம் இருப்பதாக வனத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
டிச.16, 26 மற்றும் 29 ஆகிய தேதிகளில் அலிப்பிரி வழி நடைபாதையில் சிறுத்தையும், கரடியும் பக்தர்கள் செல்லும் நடைபாதையில் வந்து சென்றிருப்பது கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.
எனவே திருப்பதியில் இருந்து திருமலைக்கு நடந்து செல்லும் பக்தர்கள் குழுக்களாக செல்ல வேண்டும் என்றும் மிகுந்த எச்சரிக்கையுடன் செல்ல வேண்டும் என்றும் தேவஸ்தான நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.